நாமக்கல், அக்.30: நாமக்கல் மாவட்டத்தில், பிரதம மந்திரி வேளாண்மை நிதிஉதவி வழங்கும் திட்டத்தில் முறைகேடு செய்த 1,892 பேரிடம் இருந்து, இதுவரை ₹72 லட்சத்து 58 ஆயிரம் திரும்ப பெறப்பட்டு இருப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் கிஷான் சம்மான் நிதிஉதவி திட்டத்தின் போலி ஆவனங்களை கொடுத்து, முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
மேலும் முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், இதுவரை 2,057 பேர் போலி ஆவணங்களை கொடுத்து கணக்கு தொடங்கி, ₹80 லட்சம் முறைகேடாக பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த வங்கி கணக்குள் முடக்கப்பட்டுள்ளது. முறைகேடு தொடர்பாக, இதுவரை 1,892 பேரிடம் இருந்து ₹72.58 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள 165 பேரிடம் இருந்து ₹7 லட்சம் இன்னும் திரும்ப பெறவேண்டியுள்ளது.
மற்ற மாவட்டங்களில் முறைகேடு செய்த போலி விவசாயிகள் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டு, கைது நடவடிக்கை வரை சென்றுள்ளது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் முறைகேடுக்கு துணை போன வேளாண் அதிகாரிகளை காப்பாற்றும் நடவடிக்கையாக, கடந்த 3 மாதமாக பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கை என்ற பெயரில் வேளாண் இணை இயக்குனர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்னும் முழுமையாக முறைகேடு செய்த பணத்தை மீட்க முடியவில்லை. ஆனால், எந்த தொடர்பும் இல்லாத அட்மா பணியளர்களை இந்த முறைகேட்டுக்கு துணை போனார்கள் எனக்கூறி, வட்டாரம் விட்டு வட்டாரம் இடமாறுதல் செய்துள்ளனர்.