×

பனியன் நிறுவன மேலாளர் வீட்டில் 30 பவுன், ரூ.25 ஆயிரம் கொள்ளை

திருப்பூர், அக். 30:  திருப்பூரில் பனியன் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் தென்னம்பாளையம் நாவிதன் தோட்டத்தை சேர்ந்தவர் செல்லக்கண்ணு (47). இவர் தமிழ்நாடு தியேட்டர் அருகே உள்ள ஒரு பனியன் நிட்டிங் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 25ம் தேதி உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் புதுக்கோட்டைக்கு சென்றார்.

நேற்று முன்தினம் காலை வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் வைத்திருந்த 30 பவுன் நகை, ரூ.25 ஆயிரத்தை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ அவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து செல்லக்கண்ணு அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags :
× RELATED தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த...