×

புதுவையில் மேலும் 2 பேர் பலி ஒரே நாளில் 181 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, அக். 30:  புதுவையில் நேற்று புதிதாக 181 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறுகையில், புதுச்சேரியில் நேற்று 4,001 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை-121, காரைக்கால்-8, ஏனாம்-19, மாகே-33 என மொத்தம் 181 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 592 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.70 சதவீதமாக உள்ளது.15 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுவையில் 20 சதவீதம் பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 3,01,167 பரிசோதனைகள் செய்துள்ளோம். இதில் 2,62,971 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது.

 மேலும், சுகாதாரத்துறை செயலர், இயக்குநர் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினேன். அப்போது, தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்தால் தனியார் மருத்துவ கல்லூரிகளை பயன்படுத்திக் கொள்கிறோம். காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் சுகாதார குழுவின் ஆய்வு முடிந்துவிட்டது. புதுவையில் நவ.3ம் தேதிக்குள் ஆய்வை முடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு நெகடிவ் என்று வந்தபிறகு அத்துடன் சுகாதாரத்துறையின் பணி முடிந்துவிட்டது என்று நினைக்க மாட்டோம். அந்த நபருக்கு முழு சிகிச்சையும் அளித்து எந்த பிரச்னையும் இல்லாமல் பார்த்து கொள்வது வரை சுகாதாரத்துறையின் கடமையாகும், என்றார்.

Tags : Puduvai Corona ,
× RELATED புதுவையில் மேலும் 2 பேர் பலி புதிதாக 66 பேருக்கு கொரோனா