×

50அடி உயரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி

பட்டாபிராம்:  ஆவடி அடுத்த பட்டாபிராம், சி.டி.எச் சாலையில் அரசுக்கு சொந்தமான வேகன் நிறுவனம் ஒன்று பல ஆண்டாக மூடி கிடக்கிறது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் கழிவு பொருட்களை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த குப்தாஜி என்பவர் செய்து வருகிறார். இவரிடம், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தாலுகாவை சேர்ந்த மாரிமுத்து (24) உள்பட சிலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாரிமுத்து, அங்கு 50 அடி உயரத்திலுள்ள மேற்கூரை மீது ஏறி பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது, அவர் அந்த கூரையின் ஆஸ்பிடாஸ் சீட் உடைந்து கீழே விழுந்தார். இதில், அவரது மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதனையடுத்து, அவரை சக தொழிலாளிகள் மீட்டு பட்டாபிராம் உள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்து வரும் வழியிலேயே மாரிமுத்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்