×

திடீர் மழையால் அம்மனம்பாக்கம் தாங்கல் சேதம்: மணல் மூட்டைகள் வைத்து சீரமைத்த பொதுமக்கள்

பெரும்புதூர்: திடீர் மழையால் அம்மனம்பாக்கம் தாங்கல் சேதமடைந்தது. இதையடுத்து, மணல் மூட்டைகள் வைத்து பொதுமக்கள் சீரமைத்தனர்.
குன்றத்தூர் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி அம்மனம்பாக்கம் கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளாக 240 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஜமீன் தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரி குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த சில நாட்களாக ஒரத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அம்மனம்பாக்கம் ஜமீன் தாங்கல் ஏரியில் தண்ணீர் நிரம்பியது. இதனால், ஏரியின் கலங்கல் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்தனர். அதன்பேரில், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஏரியை பார்வையிட்டனர். பின்னர், அம்மனம்பாக்கம் கிராம மக்களின் உதவியுடன் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர். மேலும் கரை பலவீனமாக உள்ள பகுதியையும் கண்டறிந்து உடைப்பு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.

Tags : Ammanambakkam ,public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...