ஊட்டி, அக். 29: ஊட்டி பழைய கார்டன் சாலையில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, காட்டுப் பன்றி போன்றவைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. அதிலும், காட்டுப்பன்றிகள் தற்போது நகர் புறங்களிலும் அதிகரித்துள்ளது. இவைகள் வளர்ப்பு பன்றிகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வரத்துவங்கியுள்ளன.
இரவு நேரங்களில் இவைகள் பொதுமக்களை விரட்டுவதாலும், நாய்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் சண்டை போட்டுக் கொண்டு குடியிருப்புக்களில் புகுந்து விடுவதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, பழைய கார்டன் சாலையில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, காட்டுப் பன்றிகளை விரட்டுவதற்கு அல்லது பிடித்து காட்டிற்குள் விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.