மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலி

கோவை, அக். 29: கோவையில் கொரோனா காரணமாக நேற்று ஒரே நாளில்  7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 547-ஆக உயர்ந்தது. கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறை கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. இருப்பினும், மாவட்ட அளவில் சென்னைக்கு அடுத்து கோவையில்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த மொத்தம் 218 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 516ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களை விட குணமடைந்து வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 685 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 851-ஆக உள்ளது. கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 3,118 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

நேற்று கொரோனா தொற்றினால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 48 வயது ஆண், 60 வயது ஆண், 38 வயது ஆண், 85 வயது மூதாட்டி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது  ஆண், இ.எஸ்.ஐ.யில் சிகிச்சை பெற்று வந்த  68 வயது முதியவர், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவையை சேர்ந்த 45 வயது பெண் என 7 பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 547ஆக உயர்ந்தது.

Related Stories: