×

இடையூறாக நின்றிருந்த லாரியை ஒழுங்குபடுத்திய சிறப்பு எஸ்ஐ மற்றொரு லாரி மோதி பலி மதுரை அருகே நள்ளிரவில் சோகம்

வாடிப்பட்டி, அக். 28: மதுரை செக்கானூரணி அருகே கே.புளியங்குளத்தை அடுத்த ஜாங்கிட் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (52). இவர் சமயநல்லூர் வட்டம் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் சிறப்பு எஸ்ஐயாக கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வாடிப்பட்டி சர்வீஸ் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்த லாரியை பார்த்த இவர், அங்கிருந்து அந்த லாரியை எடுக்கும்படி தெரிவித்து  கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி அதிவேகத்தில் வந்த மற்றொரு லாரி, சாலையோரம் நின்று கொண்டிருந்த நாகராஜன் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். வாடிப்பட்டி ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்ட நாகராஜன் சிகிச்சை பலனின்றி பலியானார். வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர் பரமக்குடியை சேர்ந்த பழனிச்சாமியை (55) கைது செய்தனர். பலியான நாகராஜனுக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், மகள் யோகபிரேமா, மகன் விஜயகாமன் உள்ளனர். வாடிப்பட்டி ஜிஹெச்சில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு சிறப்பு எஸ்ஐ உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அரசு மருத்துவமனைக்கு நேரடியாக வருகை தந்த மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன், சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்த் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் நாகராஜன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.  ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு எஸ்ஐ விபத்தில் பலியானது, சக போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Special SI ,Madurai ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...