நாமக்கல், அக்.28: ராசிபுரம் அடுத்த அத்தனூர் ஆயிபாளையம் கிராமத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, கோரிக்கை மனு அளித்தனர். அதன் விபரம் வருமாறு:
ஆயிபாளையத்தில் 210 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 35 ஆண்டாக அரசு புறம்போக்கு நிலத்தின் வழிப்பாதையை பயன்படுத்தி வந்தோம். அது பஞ்சாயத்து சாலையாகும். இந்நிலையில் யோகேசன் என்பவர், கடந்த 16ம் தேதி பொக்லைன் இயந்திரம் மூலம் புறம்போக்கு நிலத்தில் இருந்த மரங்கள், சாக்கடை கால்வாய்களையும் உடைத்து அந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்.
இதுகுறித்து வெண்ணந்தூர் காவல் நிலையம், ராசிபுரம் தாலுகா அலுவலகத்திலும் புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் போலீசார் உதவியுடன், ஆக்கிரமிப்பு செய்த நிலத்தில் கம்பி வேலி போட்டுள்ளனர். இதுபற்றி கேட்டால், எங்களை தரக்குறைவாக பேசி மிரட்டுகிறார். பல ஆண்டாக பயன்படுத்தி வந்த வழிப்பாதையை மீட்டு தரவேண்டும். வழிப்பாதை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.