×

பாஜவிற்கு பாடம் கற்றுத்தர தயாராகுங்கள்

தாராபுரம், அக். 28:  வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜவிற்கு பாடம் கற்றுத் தர தயாராகுங்கள் என முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார். திருப்பூர் மாவட்டத்தில் திமுகவின் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மு.பெ. சாமிநாதன், இல. பத்மநாபன் ஆகியோருக்கு தாராபுரம் நகர ஒன்றிய திமுகவின் சார்பில் தாராபுரம் அண்ணா சிலை அருகே நேற்று வரவேற்பளிக்கப்பட்டது.  இதில் தாராபுரம் நகர செயலாளர் தனசேகர், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் தாராபுரம், குண்டடம், மூலனூர், ஒன்றியங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கச்சேரி வீதி அலங்கியம் சாலை வழியாக ஊர்வலமாகச் சென்ற திமுகவினர் பெரியார் திடலை அடைந்தனர். அங்கு தந்தை பெரியாரின் சிலைக்கு மு.பெ.சாமிநாதன், இல. பத்மநாபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் மு.பெ. சாமிநாதன் பேசுகையில், தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பாஜவிற்கு தமிழக மக்கள் பாடம் கற்றுத் தந்ததைப்போல் சட்டமன்ற தேர்தலிலும் பாடம் கற்றுத்தர தயாராகுங்கள்.

  நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்காததால் பிற்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினர்க்கான இட ஒதுக்கீட்டை பெறமுடியவில்லை. எனவே அனைத்து தொகுதிகளிலும் திமுகவுக்கும் அதன் தோழமை கட்சிகளுக்கும் வெற்றியை தேடி தர வேண்டும், என்றார். முன்னதாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வீர சுந்தரி பழனிச்சாமி, மூலனூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, குண்டடம் சந்திரசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாப்பு கண்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, முன்னால் எம்.எல்.ஏ.சரஸ்வதி குளத்துப்பாளையம் பேரூர் கழக செயலாளர் துரைசாமி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆனந்தி, முன்னாள் கவுன்சிலர்கள் கமலக்கண்ணன், சீனிவாசன், யூசுப் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : BJP ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...