மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை கட்டும் பணி:கலெக்டர் ஆய்வு

திருப்பூர், அக். 28:  திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை கட்டும் பணியை கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்காக ரூ.4.95 கோடியில் பாதுகாப்பு அறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அறைகளில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், காங்கயம், அவிநாசி, திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் ஆகியன பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளது.

இப்பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சீலிடப்பட்ட பாதுகாப்பு அறை மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுவதையும் நேரில் பார்வையிட்டார்.  இந்த ஆய்வின்போது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், வட்டாட்சியர்கள் ரவீந்திரன் (தேர்தல்), சிவசுப்பிரமணியன் (பல்லடம்), சுந்தரம் (திருப்பூர் தெற்கு), பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

Related Stories: