கோவை, அக்.28: கோவை மாநகரில் வாகன விபத்து, விதி மீறலை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள 164 அதிநவீன கேமராக்கள் தேசிய தகவல் மையத்துடன் (என்.ஐ.சி) இணைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துணை ஆணையர் முத்தரசு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கோவை மாநகரில் உக்கடம், ஆத்துப்பாலம், பீளமேடு, அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட 164 இடங்கள் மற்றும் சிக்னல்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் நடைபெறும் வாகன விபத்து, குற்றங்கள், விதிமீறல் உள்ளிட்டவை டெல்லியில் உள்ள தேசிய தகவல் மையத்தில் இருந்து கண்காணிக்கப்படும். இந்த கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தேசிய தகவல் மைய அதிகாரிகள் கோவை போலீசாருக்கு தகவல் தெரிவிப்பார்கள். வாகன பதிவு எண்ணை வைத்து அவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். அதன் மூலம் விதி மீறலில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்க முடியும். மேலும் இங்கு குற்றங்களை செய்துவிட்டு வேறு மாநிலத்திற்கு தப்பி சென்றாலும் வாகன விவரங்களை வைத்து அவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும்’ என கூறினார்.