ஊத்தங்கரை, அக்.23: ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் சார்பில், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம், ஊத்தங்கரை நகரில் நடைபெற்றது. நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில், கடந்த 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை தினசரி காலை, மாலை இரண்டு நேரங்களிலும் ஊத்தங்கரை வட்டார நகர பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர், துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும், கடைவீதி, கல்லாவி சாலை, பஸ் ஸ்டாண்ட், ரவுண்டானா, சேலம் சாலை, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊத்தங்கரை முன்னாள் பேரூராட்சி தலைவர் பூபதி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், தீயணைப்பு நிலைய வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.