மாசு கட்டுப்பாட்டு அதிகாரி மனைவியின் வங்கி லாக்கரில் 400 கிராம் தங்கம் பறிமுதல்

வேலூர், அக்.23: வேலூரில் விஜிலென்ஸ்சில் சிக்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மனைவியின் வங்கி லாக்கரில் 400 கிராம் தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மண்டல மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான காட்பாடி, ராணிப்பேட்டையில் உள்ள வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் நடத்திய சோதனையில் ₹3.25 ேகாடி ரொக்கம், 3.5 கிலோ தங்க நகை, 6.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 90 சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு பாஸ் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முதற்கட்டமாக பன்னீர்செல்வத்தின் மனைவி புஷ்பாவின் பெயரில் உள்ள வங்கி கணக்கு மற்றும் லாக்கர் முடக்கப்பட்டது. கைப்பற்றிய 90 சொத்து ஆவணங்களில் 65 ஆவணங்கள் அசையா சொத்து என ஆய்வில் தெரியவந்தது. மேலும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள 12 வங்கி கணக்குகளை விஜிலென்ஸ் போலீசார் முடக்கினர்.

இதற்கிடையே ராணிப்பேட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புஷ்பாவின் பெயரில் இருந்த வங்கி லாக்கரை விஜிலென்ஸ் போலீசார் நேற்று முன்தினம் திறந்தனர். அதில் மொத்தம் 400 கிராம் தங்க காசுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார், பறிமுதல் செய்தனர்.

தினந்ேதாறும் விஜிலென்ஸ் போலீசார் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி குவித்த பலகோடி மதிப்பிலான சொத்துக்களை கண்டுபிடித்து வருகின்றனர். இதனால் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி புஷ்பாவிடம் மேலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து விஜிலென்ஸ் போலீசார் கூறியதாவது:

பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் உள்ள 12 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவரின் சொத்து மதிப்பு விவரங்கள் குறித்து இதுவரை முழு மதிப்பீடு செய்யப்படவில்லை. தினந்தோறும் ஆய்வுகள் நடந்து வருகிறது. மனைவியின் பெயரில் இருந்த லாக்கரில் 400 கிராம் தங்க காசுகள் பறிமுதல் செய்துள்ளோம். சொத்து விவரங்கள் குறித்து முழுமையாக ஆய்வு நடத்தி மதிப்பீடு செய்தால் மட்டுமே உண்மையான நிலவரம் தெரியவரும். வங்கி கணக்குகள் மூலம் நடந்த பண பரிவர்த்தனை குறித்தும் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் தங்க காசுகள் நீதிமன்ற உத்தரவுப்படி கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். தினமும் நடக்கும் சோதனையில் சொத்து பட்டியல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுதொடர்பாக பன்னீர் செல்வம் மற்றும் குடும்பத்தினரிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: