திருவாரூர், அக்.23: திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லினை உடனடியாக இயக்கம் செய்திட வேண்டுமென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அதன் மாநில பொதுச் செயலாளர் இளவரி திருவாரூரில் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 246 அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டன் வரை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் ஊழியர்களுக்கு இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது, எனவே இதனை உடனே குடோன்களுக்கு இயக்கம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை ஏற்றிச் செல்வதற்கு லாரி ஒன்றுக்கு ரூ 1,500 முதல் 2 ஆயிரம் வரையில் லஞ்சம் கேட்கப்படுவதால் இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சணல் தட்டுப்பாடு இருந்து வருவதால் கொள்முதல் நிலைய ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், மேலும் திறந்த வெளி கிடங்குகளை அதிக அளவில் ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.