×

அமெரிக்க நிறுவனத்தின் திறன் வளர்ப்பு பயிற்சிபெற ஆன்லைனில் விண்ணப்பம்

கரூர், அக். 23: கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் அமெரிக்கா நிறுவனமான கோர்ஸரா நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பற்ற 50 ஆயிரம் நபர்களுக்கு இணைய வழியில் 11 பிரிவுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையிலான பாடங்களில் இலவசமாக குறுகிய கால பயிற்சி அளித்திடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலையமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கோர்ஸரா நிறுவனம் 80 நாடுகளில் உலகத்தரம் வாய்ந்த திறன்களை வளர்க்கும் இலவச பயிற்சி வகுப்புகளை இணையதளம் வழியாக நடத்தி வருகிறது.

மேலும் இந்த நிறுவனம் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், கூகுள், ஐபிஎம் மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் இணைந்து பொறியியல், இயந்திர கற்றல், கணிதம், வணிகம், கணினி அறிவியல், டிஜிட்டல் சந்தைப்படுத்துதல், மருத்துவம், உயிரியல், சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்களில் இணைய வழியில் பாடங்களை நடத்தி சான்றிதழ் படிப்புகள் மற்றும் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. உலகின் முன்னணி பல்கலைக் கழகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள பயிற்றுநர்களைக் கொண்டு தரமான பாடக்குறிப்புகள் மற்றும் காணொளி பாடத்தொகுப்புகளுடன் பயிற்றுவிக்கப்படுகிறது.

 பயிற்சி முடிந்தவுடன் இணையதளம் வழியாக வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி வேலை வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை பெற விரும்புவர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும், 18 வயது பூர்த்தியானவராகவும், வேலை வாய்ப்பற்றவராகவும் இருக்க வேண்டும். மேலும் பயிற்சியை பெற ஆதார் எண், மின்னஞ்சல் முகவவி மற்றும் தொலைபேசி எண் ஆகிய விபரங்களுடன் அக்டோபர் 31ம் தேதிக்குள் www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : US ,
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...