கோட்டூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ஆனைமலை, அக். 23:  கோட்டூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் சுமார் 3,400 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிற்கு 2 போகம் என நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான முதல் போக நெல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் கடந்த 12ம் தேதி ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

இந்நிலையில், கோட்டூர் சுற்று வட்டார பகுதிகளான அங்கலக்குறிச்சி, ரமணமுதலிபுதூர் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் சுமார் 600 ஏக்கரி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கும் தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வருவதால் கோட்டூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கோட்டூர் வாரச்சந்தையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. வால்பாறை எம்.எல்.ஏ கஸ்தூரிவாசு கலந்துகொண்டு நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். விவசாயிகள் கொண்டு வந்த சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1,950க்கும், மோட்டா ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,918 என நிர்ணயித்து அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்தனர். தற்போது முதல் போக அறுவடை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், நவம்பர் மாதம் இரண்டாம் போக நெல் சாகுபடி தொடங்கப்படும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Stories: