கோவை, அக்.23: மாநிலம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் நேற்று கோவை கணபதி, மதுக்கரை, அன்னூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மொத்தம் 285 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 982ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து நேற்று ஒரே நாளில் 290 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 701-ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் அதே நேரம், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
நேற்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதி 59 வயது ஆண் சர்க்கரை நோய் காரணமாக அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதனால், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528-ஆக உயர்ந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் தற்போது மொத்தம் 3,753 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.