×

சுண்டல் விற்கும் மாணவனுக்கு உதவி அக்காவின் படிப்புக்காக செல்போன் பரிசளித்து ராஜேஷ்குமார் நெகிழ்ச்சி

ராசிபுரம், அக்.22:ராசிபுரத்தில் அக்காவின் படிப்புக்காக சுண்டல் விற்ற சிறுவனுக்கு, மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் செல்போன் பரிசளித்தார்.
ராசிபுரம் ஒன்றியம் பிள்ளாநல்லூரைச் சேர்ந்த திமுக ஒன்றிய பிரதிநிதி ரவிச்சந்திரன். இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஸ்ரீவர்ஷினி(19) என்ற மகளும், 9ம் வகுப்பு படிக்கும் கவிசெல்வன்(14) என்ற மகனும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், சர்க்கரை நோய் பாதிப்பால், ரவிச்சந்திரனின் இடதுகால் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. இதனால், அவரது மனைவி ஜெயமணி, கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். தற்போது, கொரோனா விடுமுறை என்பதால், வீட்டில் உள்ள கவிசெல்வன், தாய்க்கு உதவியாக பஸ் ஸ்டாண்டில், சுண்டல் விற்று வருகிறார்.

இதை கேள்விப்பட்ட கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், பிள்ளாநல்லூர் பேரூர் பொறுப்பாளர் சுப்பிரமணியம் ஆகியோர்,  மாணவன் வீட்டிற்கு சென்று, ரவிச்சந்திரனுக்கு ஆறுதல் கூறினர்.  பின்னர், அவரது மருத்துவ செலவுக்கு ₹5 ஆயிரம் நிதி வழங்கிய ராஜேஷ்குமார், மாணவன் கவிசெல்வனிடம் என்ன உதவி வேண்டும் என கேட்டார். அப்போது, தனக்கு எந்த உதவியும் வேண்டாம் என கூறிய அவன், கல்லூரியில் படிக்கும் தனது அக்கா, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஆண்ட்ராய்டு செல்போன் இல்லாததால், தனது உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாகவும், அவருக்கு செல்போன் வேண்டும் என்றும் கூறினான்.

இதை கேட்டு நெகிழ்ச்சி அடைந்த ராஜேஷ்குமார், உடனடியாக திமுகவினரை அனுப்பி ₹10,500 மதிப்புள்ள செல்போனை வாங்கி கொடுத்ததோடு, இருவரது படிப்பு செலவையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார். கேட்காமலேயே தேடி வந்து உதவி செய்த ராஜேஷ்குமாருக்கு, மாணவன் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Tags : Rajeshkumar ,student ,sister ,
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...