×

ஓசூர் முதியவர் கொலையில் சிறுவன் உள்பட 2 பேர் கைது

ஓசூர், அக்.22: ஓசூர் அருகே முதியவர் கொலையில், சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சூடசந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூபலியப்பா (65). ஆடு, மாடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தார். கடந்த 3ம் தேதி காலை, வழக்கம் போல் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். மாலையில் ஆடு, மாடுகள் வீடு திரும்பிய நிலையில், கூபலியப்பா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், அவரை தேடி சென்ற போது, வக்கீல் லே அவுட் அருகே உள்ள புதரில், கழுத்து அறுக்கப்பட்டு கூபலியப்பா இறந்து கிடந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சூடசந்திரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சந்தோஷ் (23), சானசந்திரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும், சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், கூபலியப்பாவிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாயை பறிக்க முயன்ற போது, அவர் பணத்தை கொடுக்காததால், போதையில் இருந்த சிறுவன் உள்பட 2 பேரும் சேர்ந்து, கூபலியப்பாவை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறினர். இதையடுத்து, இருவரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், 17 வயது சிறுவனை சேலம் இளம் சிறார் காப்பகத்திலும், சந்தோசை கிருஷ்ணகிரி சிறையிலும் அடைத்தனர்.

Tags : Hosur ,murder ,
× RELATED ஓசூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ