×

ஓய்வூதிய பணம் பெற லஞ்சம் கருவூலகத்தில் அதிகாரி அதிரடி விசாரணை

தேவகோட்டை, அக்.22: தேவகோட்டை மாவட்டக்கல்வி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர் சேது. 15 வருடங்களுக்கு முன்பு இறந்தார். அவருக்கு பிறகு அவரது மனைவி மங்கை, குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தார். அவரும் கடந்த 2011ல் இறந்தார். இவரது குடும்பத்தில் திருமணம் ஆகாத மகள் சுமதிக்கு சட்டப்படி குடும்ப ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்தனர். கடந்த 9 வருடமாக வரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.7 லட்சத்து 45ஆயிரமும் சுமதிக்கு வழங்கிட மாநில கணக்காயர் அலுவலகம் மூலம் உத்தரவாகி பணமும் தேவகோட்டை சார்நிலைக் கருவூலகத்திற்கு வந்தது. ஆனால் சுமதியிடம் அந்தப்பணத்தை வழங்குவதற்கு சார்நிலை கருவூலகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது. இதுதொடர்பான புகாரால் நேற்று மதுரை மண்டல இணை இயக்குநர் முரளி தேவகோட்டை கருவூலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். ஆனால் புகார் அளித்த சுமதி விசாரணைக்கு வரவில்லை. பல மணி நேரம் காத்திருந்தும் சுமதி வராத காரணத்தால் அலுவலக விசாரணையோடு திரும்பிச் சென்றார்.

Tags : action investigation ,
× RELATED பாலம் பிரச்சனை எதிரொலி...