திருப்பரங்குன்றம், அக்.22: மதுரை திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திற்கு செல்வதற்காக பெங்களூரு - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் கூத்தியார்குண்டுவில் இருந்து 6.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.21 கோடி செலவில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தரமற்று இருப்பதாக இப்பகுதியினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகே சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து தண்ணீர் தேங்கியது. இந்த பள்ளத்தில் வாகனங்கள் சென்று வரும் போது கற்கள் பெயர்ந்து மேலும் பள்ளமாகி தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்த செய்தி தினகரனில் படத்துடன் அக்.20ம் பிரசுரமானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலை துறையினர் நேற்று இந்த சாலையை செப்பனிட்டனர். இதனால் இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலை துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.