புதுச்சேரி, அக். 21: புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண்ணை தாக்கி துன்புறுத்தியதாக விரிவுரையாளர் மற்றும் உறவினர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். புதுச்சேரி, எல்லைபிள்ளைச்சாவடி, எஸ்பிஐ காலனி, 4வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (33). விரிவுரையாளரான இவருக்கும், கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசிக்கும் சுகித்தா (26) என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சுகித்தா, தனது கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார். புதுமண தம்பதிகளான அவர்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியிடையே அவ்வப்போது வாக்குவாதம் மூண்ட நிலையில், சம்பவத்தன்று ரவிச்சந்திரன் தனது மனைவியை அசிங்கமாக திட்டி உருட்டுக்கட்டையால் தாக்கி அடித்து துன்புறுத்தினாராம்.