திண்டுக்கல், அக்.21: ஒரே பயிரை பயிரிடாமல் பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவது அதிக லாபத்தை தரும் என தோட்டக்கலைக்கல்லூரி தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட வேளாண்துறையினர் தெரிவித்துள்ளதாவது: பயிர் சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்து பயிரிடும் முறையாகும். ஒரே பயிரை பயிரிடுவதால் களை செடிகளின் ஆதிக்கம் அதிகமாகும். உழவு முறைகள் களை செடிகள் பரவுதலை இடையூறு செய்து அவற்றை கட்டுப்படுத்த உதவும். இவ்வாறு பயிர் சுழற்சி களைகள் கட்டுப்பாட்டை எளிமையாக்குகிறது. ஒரு குறிப்பிட்ட நிலத்தில் ஒரே வகையான பயிர்களை பயிரிடாமல் சுழற்சி முறையில் பயிரிடவேண்டும். இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சம் பயிர் சுழற்சி முறையே ஆகும். முதல் பருவத்தில் நெல், உளுந்து, அதற்கு அடுத்து பயறு வகைகள் என மாறி மாறி பயிரிடும் சுழற்சி முறையினால் மண்ணின் வளம் கூடுகிறது.