தேசிய பஞ்சாலை தொழிலாளர்களுக்கு போனஸ் கிடைக்குமா?

கோவை, அக். 21: தேசிய பஞ்சாலை தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனஸ் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மத்திய அரசின் ஜவுளித்துறை கட்டுப்பாட்டில் உள்ள என்.டி.சி. எனப்படும் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான பஞ்சாலைகள் நாடு முழுவதும் 24 இடங்களில் உள்ளன. தமிழ்நாட்டில், கோவையில் 5 பஞ்சாலைகள் உள்பட ெமாத்தம் 7 பஞ்சாலைகள் உள்ளன. இவற்றில், 5 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் 23ம் தேதி முதல் இந்த ஆலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு தளர்வு காரணமாக, கடந்த 18.5.2020 முதல் குறைந்த தொழிலாளர்களுடன் ஆலைகளை இயக்கலாம் என மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டன. ஆனால், என்.டி.சி. நிர்வாகம் ஒத்துக்கொள்ளவில்லை. இன்றுவரை ஆலைகள் இயக்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். இந்நிலையில், ஆலைகளை இயக்கவேண்டும், தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து பஞ்சாலை தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், கடந்த வாரம் கோவை காட்டூரில் உள்ள என்.டி.சி. மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, வீடு திரும்பா போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், என்.டி.சி. நிர்வாகம், கேட்டுக்கொண்டதற்கு இணங்க போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதன்பிறகு, பேச்சுவார்த்தைக்கு வரும்படி என்.டி.சி. நிர்வாகம் அழைத்தது. அதன்படி, கடந்த 19ம் தேதி என்.டி.சி. நிர்வாகம்-தொழிற்சங்க தலைவர்கள் என இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், இதில் ஒருமனதாக முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள தீபாவளி பண்டிகைக்கு, போனஸ் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு என்.டி.சி. தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தொழிலாளர் சட்ட விதிகளின்படி குறைந்தபட்சம் 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஆலைகள் 7 மாதத்திற்கும் மேல் இயங்காமல் உள்ள நிைலயில், இந்த சதவீதம்படி போனஸ் கிடைக்குமா? என தொழிலாளர்கள் ஏங்கி தவிக்கின்றனர். இதுபற்றி எச்.எம்.எஸ். தலைவர் ராஜாமணி கூறியதாவது: என்.டி.சி. ஆலைகளில், ரூ.150 கோடி உற்பத்தி பொருள் (நூல், துணி) இருப்பில் உள்ளது. அதை விற்றபிறகு ஆலைகளை இயக்குவது சம்பந்தமாக என்.டி.சி. தலைமை முடிவு எடுக்கும் என கோவை மண்டல அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதை, ஏற்க முடியாது. தொழிலாளர்களை பட்டினி போடாமல், ஆலைகளை இயக்கவேண்டும். தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும். தீபாவளிக்கு கடந்த ஆண்டுபோல் அட்வான்ஸ் தொகை வழங்கவேண்டும். முழு அளவில் போனஸ் வழங்க வேண்டும். இல்லையேல், தொழிலாளர்களை திரட்டி, போராட்டம் நடத்துவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். இவ்வாறு ராஜாமணி கூறினார்.

Related Stories: