கோவை, அக். 21: கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. ஆனால், தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால், பொதுமக்களிடம் கொரோனா குறித்து இருந்த அச்சம் நீங்கியுள்ளதாக தெரிகிறது. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலர் மாஸ்க் அணியாமல் வெளியில் நடமாடுகின்றனர். மேலும், கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். கிருமி நாசினி, கை கழுவ எவ்வித வசதியும் இல்லாமல் காணப்படுகிறது. தவிர, ஏசியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், பொது இடங்களில் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.