வீட்டின் பூட்டு உடைத்து 19 சவரன், ஒரு கிலோ வெள்ளி திருட்டு வேலூரில் மர்ம கும்பல் துணிகரம்

வேலூர், அக். 20: வேலூரில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டின் பூட்டு உடைத்து 19 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அலமேலுமங்காபுரம் போஸ்டல் நகரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் சென்னையில் உள்ள தனியார் கெமிக்கல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு சென்னையிலும் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. கடந்த வாரம் அனைவரும் வீட்டை பூட்டிக்கொண்டு சென்னையில் உள்ள வீட்டிற்கு சென்றனர்.

இந்நிலையில் ஜெயராஜின் வீட்டின் பூட்டு நேற்று காலை உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், செல்போன் மூலம் ஜெயராஜிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஜெயராஜ் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 19 சவரன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ₹15 ஆயிரம் ரொக்கம், ₹50 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப்புடவைகளை மர்மகும்பல் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜெயராஜ் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: