திண்டுக்கல், அக். 20: அரசு வேலை கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் கேனுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒட்டன்சத்திரம் வீரலப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. மாற்றுத்திறனாளி. இவர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்திருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் பாண்டி கலெக்டரிடம் மனு அளித்தார். அம்மனுவில், ‘நான் வீரலப்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எங்கள் ஊருக்கு வரும் பஸ்கள் மிக குறைவாக உள்ளது. இதனால் சரியான நேரத்திற்கு தனியார் மருத்துவமனையில் பணிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகிறேன். மிக வறுமையில் இருக்கும் எனக்கு டூவீலர், அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார். தொடர்ந்து கலெக்டர் அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.