திண்டுக்கல், அக். 20: நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது ஆர்.கோம்பை சீலக்கரட்டில் சிட்கோ பணி தீவிரமாக நடப்பது ஏன் என எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை சீலக்கரட்டில் வனத்துறைக்கு சொந்தமாக 57 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலான வேம்பு, புளியமரம், தோதகத்தி, பூவரசம் போன்ற பலவகையான மரங்கள் உள்ளன. இங்கு தமிழக அரசு அறிவித்தபடி சிட்கோ அமைப்பதற்காக முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே வறட்சி காரணமாக பாதிப்படைந்துள்ள குஜிலியம்பாறை பகுதியில் மரங்களை வெட்டுவதால் மேலும் பாதிக்கப்படும். எனவே கரட்டு பகுதியில் சிட்கோ அமைக்காமல் தரிசு நிலமாக உள்ள சமவெளி பகுதியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கரூர் எம்பி ஜோதிமணி தலைமையில் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.