கோவை, அக். 20: கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் அலுவலர்களிடம் தெரிவித்ததாவது: கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள், பூங்காக்கள் அமைக்கும் பணி, மாதிரி சாலைகள் அமைக்கும் பணி, பாலங்கள், பாதாள சாக்கடை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
மாதிரி சாலையில் மின்சாரம், மிளிரும் விளம்பர பலகைகள் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் போன்ற அனைத்து பயன்பாடுகளும் நிலத்தடியில் செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடைபாதை ஓரங்களில் நவீன மின்விளக்கு வசதிகள் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இது போன்ற அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார். கூட்டத்தில் மாநகர பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஸ்மார்ட்சிட்டி திட்டம் சரவணக்குமார் மற்றும் பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.