குண்டுமல்லி கிலோ ₹1200 ஆக உயர்வு

சேலம், அக்.18: சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக குண்டுமல்லி, ஊசிமல்லி, ஜாதிமல்லி, கனகாம்பரம், அரளி, சாமந்தி, சம்பங்கி உள்பட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் பூக்களை விவசாயிகள் பெரும்பாலும் வ.உ.சி., பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த இரு மாதமாக பெய்து வரும் மழையால் பூக்கள் நல்ல விளைச்சலை தந்துள்ளது. இதன் காரணமாக பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. இதன் காரணமாக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்று பூ மார்க்கெட்டில் பெரும்பாலான பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. அந்த வகையில் ஒரு கிலோ குண்டுமல்லி ₹ 1200ஆக உயர்ந்தது. முல்லை பூ ₹ 700, ஜாதிமல்லி ₹ 320, காக்கட்டான் ₹ 400, அரளி ₹ 80, வெள்ளை அரளி ₹ 80, மஞ்சள் அரளி ₹ 80, செவ்வரளி ₹100, நந்தியாவட்டம் ₹160, சம்பங்கி ₹ 120 என விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: