×

₹3.25 கோடி, 3.6 கிலோ தங்கம் பறிமுதல் எதிரொலி

வேலூர், அக்.16: வேலூர் மண்டல சுற்றுச்சூழல் முதன்மை பொறியாளர் வீட்டில் 3.25 கோடி பணம், 3.6 கிலோ தங்கம், 6.5 கிலோ வெள்ளி, நில ஆவண பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவரது வங்கி லாக்கர்களில் சோதனை நடத்த விஜிலென்ஸ் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(51). இவர் வேலூர் மண்டல இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக வேலூர் காந்தி நகர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இதற்காக விருதம்பட்டில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பணிக்கு சென்று வருகிறார். இவர் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, வாணியம்பாடி, விழுப்புரம், ஓசூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்களில் உள்ள தொழிற்சாலைகள், பள்ளி, வணிக வளாகம் ஆகியவற்றுக்கு அனுமதி, உரிமம் வழங்குவது போன்ற பணிகளுக்காக முறைகேடாக பணம் பெறுவதாக விஜிலென்ஸ் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவர் வேலூரில் தங்கியிருந்த இடம், ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள அவரது வீடுகளில் நேற்று முன்தினம் டிஎஸ்பி ஹேமச்சித்திரா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினிகாந்த் மற்றும் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ₹3.25 கோடி ரொக்கம், 3.6 கிலோ தங்க நகை, 6.5 கிலோ வெள்ளி பொருட்கள், 90க்கும் மேற்பட்ட பல கோடி மதிப்பிலான நில ஆவண பத்திரங்கள், வங்கி பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த விஜிலென்ஸ் போலீசார் கைப்பற்றப்பட்ட பணம், தங்கம், வெள்ளி நகைகள் அனைத்தையும் நேற்று கோர்ட்டில் ஒப்படைத்தனர்.தொடர்ந்து பன்னீர்செல்வத்தின் வங்கி லாக்கர்களில் சோதனை நடத்த உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் மூலம் அசையா சொத்துக்களின் மதிப்பையும் கண்டறிய முடிவு செய்துள்ளனர். மேலும், அவர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக விஜிலென்ஸ் போலீசார் தெரிவித்தனர்.

குடும்பத்தினரிடம் விசாரணை
பன்னீர்செல்வத்துக்கு மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துள்ளது. ஒரு மகள் அமெரிக்காவில் கணவருடன் செட்டிலாகியுள்ளார். மற்றொரு மகள் சென்னையில் அரசு அதிகாரியாக உள்ளார். மகன் முதுநிலை பொறியியல் படிப்பை முடித்துவிட்டு ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான அத்திமாஞ்சேரியில் உள்ள வீட்டில் அவரது தாய் மட்டும் வசித்து வருகிறார். இந்நிலையில் பன்னீர்செல்வம் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் விஜிலென்ஸ் போலீசார் பணம், நகைகள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, ‘அவர் எங்களிடம் எதுவும் ெசால்வதில்லை. அவரே வருவார், பணத்தை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு கொண்டு சென்று வைப்பார். மற்றபடி எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்றார்களாம்.

ரெய்டு விவரம் அறியாத அதிகாரி
நேற்று முன்தினம் விஜிலென்ஸ் போலீசார், தன்னிடம் பறிமுதல் செய்த பணத்துடன் விவகாரம் முடிந்துவிடும். வழக்கை சந்தித்துக் கொள்ளலாம் என்று சர்வசாதாரணமாக நினைத்து விருதம்பட்டிலேயே தங்கியிருந்துள்ளார். ஆனால் காலையில் சிப்காட்டில் பன்னீர்செல்வம் வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் ரெய்டு நடத்துவதற்காக சென்றனர். இந்த தகவலை விஜிலென்ஸ் போலீசாரே போன் மூலம் தெரிவித்து அழைத்த பின்னர்தான் தனது வீட்டிலும் ரெய்டு நடத்துவது அவருக்கு தெரிந்ததாம்.

Tags :
× RELATED வேலூர் அருகே காரில் கடத்தல்: பாஜக...