புதுச்சேரி, அக். 16: கொரோனா காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. அதன் பிறகு அடுத்தடுத்து பல கட்டங்களாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி கடைகள், ஓட்டல்கள், கடற்கரை, பள்ளிகள் திறக்கப்பட்டு சகஜ நிலை திரும்பின. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி புதுச்சேரியில் நேற்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. முதல் நாளில் 2 தியேட்டர்கள் மட்டும் திறக்கப்பட்டன. திருவள்ளுவர் சாலையில் உள்ள ஷண்முகா சினிமாஸ் மற்றும் அண்ணா சாலையில் உள்ள ராஜா தியேட்டர் மட்டும் திறக்கப்பட்டது. இந்த 2 தியேட்டரிலும் ஆங்கில டப்பிங் படங்கள் திரையிடப்பட்டன. காலை 11.45 மணிக்கு படக்காட்சி தொடங்கியது. ஊரடங்கு தளர்வுக்கு பின் முதல் நாள், முதல் காட்சி என்பதால் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. 50 முதல் 100 நபர்கள் வரை மட்டுமே வந்திருந்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகமாக இருந்தனர்.