ஒரு சின்னமாகத் திகழ்ந்தது அனல் மின்நிலையத்தின் பயணம் நிறைவடைந்தது பிரியாவிடை கொடுத்த என்எல்சி இந்தியா நிறுவனம்

நெய்வேலி, அக். 2: 1962ம் ஆண்டு தொடங்கப்பட்ட அனல் மின் நிலையம்-1ன் புகழ்மிக்க பயணம் கடந்த 30ம்தேதியுடன் நிறைவடைந்தது. பழுப்பு நிலக்கரி படிமம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பழுப்பு நிலக்கரியினை முதன்மை எரிபொருளாக கொண்டு இயங்கக்கூடிய, தெற்காசியாவின் முதல் மற்றும் ஒரே அனல்மின் நிலையம் நெய்வேலியில் அமைக்கப்பட்டது. இந்தோ-சோவியத் கூட்டு முயற்சியில் 600 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்டதாக, முதலாம் அனல் மின்நிலையம் 9 அலகுகளுடன், தலா 50 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட 6 அலகுகளும், தலா 100 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 3 பிரிவுகளும், 1962ம் ஆண்டு முதல் 1970 வரையிலான காலங்களில் மூன்று கட்டங்களாக ஆரம்ப மூலதனச் செலவு ரூ.77.81 கோடியில் உருவாக்கப்பட்டது.  

 23.05.1962 அன்று, அலகு-1ம், 21.02.1970 அன்று, கடைசி மற்றும் 9ம் அலகும், மின்பகிர்மானத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன. 1962ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 5ம் நாள், அலகு-1, அப்போதைய இந்திய ஜனாதிபதி ராதாகிருஷ்ணனால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இம்மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் முழுவதும், ஒரே பயனாளரான, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு வழங்கப்பட்டு வந்தது.  இம்மின் நிலையத்திற்கு மாற்றாக அமைக்கப்பட்டு வரும் நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தின் முதலாம் அலகு, வணிக ரீதியிலான மின்உற்பத்தியை துவங்கியதை அடுத்து, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரை, முதலாம் அனல் மின்நிலையத்தின் மின் உற்பத்தியை படிப்படியாக நிறுத்த திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில், ஒவ்வொரு அலகாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 30ம்தேதி மாலை 4.04 மணிக்கு, இறுதியாக, 6வது அலகில் மேற்கொள்ளப்பட்டு வந்த மின்உற்பத்தியும் நிறுத்தப்பட்டு, அனல்மின் நிலையம்-1ன் மின்உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

இம் மின்நிலையம் செயல்படத் தொடங்கியதில் இருந்து 32,66,140 மணி நேரம் அயராது செயல்பட்டு, 1,85,390 மில்லியன் யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்துள்ளது. அனல் மின் நிலையம்-1ன் கொதிகலன்கள், டர்பைன்கள், ஜெனரேட்டர்கள் ஓசையின்றி அமைதியாகின, இதுநாள் வரை திறம்பட மின்உற்பத்தி செய்து வந்த, நேசமிக்க தாய் அனல் மின்நிலையம்-1க்கு, என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் ஊழியர்கள் உணர்ச்சி

பூர்வமான பிரியாவிடை கொடுத்தனர்.

Related Stories: