வேலூர் மாவட்டத்தில் உள்ள பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர், அக், 1: தமிழகம் முழுவதும் அனைத்து பணிமனைகள் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, வேலூர் கொணவட்டம் அரசு போக்குவரத்து பணிமனை எதிரே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச பொருளாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஏஐடியூசி தலைவர் அசோகன், சிடிஎஸ்எப் சங்க துணைத்தலைவர் கோமகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்கக்கூடாது. அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும். குறைவான பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் இழப்பை முழுமையாக அரசு ஈடுகட்ட வேண்டும். போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும். விதிமுறைகள் அடிப்படையில் பஸ்களை இயக்க வேண்டும். நோய் தொற்றுக்கு வழிவகுக்கக்கூடாது. நோய் தொற்றால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பஸ்கள் குறைவான கிலோ மீட்டர் இயக்கப்படுவதை காரணம் காட்டி ஸ்டேரிங் அலவன்ஸ், சிப்ட் அலவனஸ், பேட்டா ஆகயவற்றை குறைக்கக்கூடாது. ஊதிய பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும் அரசாணையை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு விடுப்பு சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், வேலூர் ரங்காபுரம் அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம், கிருஷ்ணா நகர் பணிமனை, குடியாத்தம் பணிமனை மற்றும் பேரணாம்பட்டு பணிமனை என மொத்தம் 5 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: