திருச்சி, அக். 1: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்பட 10,906 பணியிடங்களுக்கான விண்ணப்பப்படிவங்கள் ஆன்லைன் மூலமாக அனுப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநகர கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் தேர்விற்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு உதவிடும் வகையில் திருச்சி மாநகர காவல் அலுவலக வளாகத்தில் கடந்த 27ம் தேதி முதல் விண்ணப்பதாரர்களுக்கான உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தை மாநகர கமிஷனர் லோகநாதன் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக துவக்கி வைத்தார்.