ஊட்டி, அக். 1: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேல் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் 10,900 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 26ம் தேதி ஆகும். அதற்கு பின் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எழுத்து தேர்வு டிசம்பர் 13ம் தேதி நடக்கிறது. www.tnusrbonline.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு மாவட்ட காவல்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் காவலர் தேர்வுகளுக்கு மாவட்டத்தின் பல இடங்களில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி ஊட்டி, குன்னூர், கூடலூர், மசினகுடி, எருமாடு, கொளப்பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகள் இணையதளம் வாயிலாக நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பித்த படிவத்தின் நகலெடுத்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்பித்து இப்பயிற்சி பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0423-2444004, 2223346 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேல் தெரிவித்துள்ளார்.