நாமக்கல், அக்.1: நாமக்கல், ராசிபுரத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்துக் கழகத்தின் நாமக்கல் பணிமனை முன்பு, அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச செயலாளர் பிரகாசம் தலைமை வகித்தார். ஏஐடியூசி சம்மேளன மாநிலத் தலைவர் முருகராஜ் கோரிக்கையை விளக்கி பேசினார். 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்; தொழிலாளர்களின் விடுப்பிற்கு சம்பள பிடித்தம் கூடாது; போக்குவரத்து கழகங்களின் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும்;
குறைந்த பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுவதால் ஏற்படும் இழப்பை முழுமையாக அரசே ஈடுகட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் செல்வம், தியாகராஜன், வரதராஜன், சுப்பிரமணி, சேகர், சிவக்குமார், பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ராசிபுரம்: ராசிபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் தொமுச, ஏஐசிடியூ, சிஐடியூ உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.