×

அரூர் அருகே இருளில் மூழ்கிய மலை கிராமத்திற்கு மின் வசதி மக்கள் மகிழ்ச்சி

தர்மபுரி, அக்.1: தர்மபுரி மாவட்டத்தில், 2 சதவீதம் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.சித்தேரி, சிட்லிங், ஏரிமலை, கோட்டூர் மலை, அலகட்டு, வத்தல்மலை, பிக்கிலி மலை உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். மலைபயிர் சாகுபடி செய்தல், கூலிவேலை மற்றும் ஆடு, மாடு வளர்த்தல் தொழிலாக செய்து வருகின்றனர். அரசின் திட்டங்கள், இப்பகுதி மக்களுக்கு முழுமையாக சென்று சேர்வதற்கு தொடர்ந்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில், அரூர் வட்டம் காரப்பாடி மலை கிராமத்திற்கு, மின்சார வசதி இல்லாமல் இருந்தது. மின்சார வசதி செய்து தரக்கோரி தமிழக முதல்வருக்கும், உயர்கல்வித்துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் ₹31 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் மின் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.

மலைப்பகுதிகளில் 172 மின் கம்பங்கள் நடப்பட்டு 63 கிலோ வாட் மின் மாற்றி வசதியுடன் காரப்பாடி மலை கிராமத்துக்கு சமீபத்தில் மின் வசதி அமைத்துத் தரப்பட்டுள்ளது. இதன்மூலம், காரப்பாடி மலை கிராமத்தின் ஒவ்வொரு இல்லங்களுக்கும், தெருவிளக்குகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் மின்விளக்கு வசதியை பார்த்திராத காரப்பாடி மலை கிராம மக்கள் இந்த நடவடிக்கையின் மூலம் மின் இணைப்பு பெற்றுள்ளனர்.  இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், அகல் விளக்கில் வாழ்ந்து, அத்ன ஒளியில் படித்து வந்தோம்.

தற்போது மாணவ, மாணவிகள் மின் விளக்கு வெளிச்சத்தில் உத்வேகத்துடன் இரவு நேரங்களில் பாடங்களை படிக்கத் தொடங்கியுள்ளனர். வானொலி மற்றும் தொலைக்காட்சி உதவியுடன் நாட்டு நடப்புகளை அறிந்து வருகின்றனர். மேலும் சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகளை நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் அப்பணிகள் நிறைவேற்றி தரப்படும் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். மின்சார வசதியால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றனர்.

Tags : Arur ,hill village ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...