செங்கல்பட்டு: அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக இருதய தினத்தையொட்டி, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள், மருத்துவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, இருதய நோய் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, மருத்துவமனை வளாகத்தில் பேரணியாக சென்று, நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், மருத்துவமனை டீன் சாந்திமலர் பேசுகையில், இருதய நோய் வராமல் தடுக்க, தினமும் குறைந்தது அரைமணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். புகை பிடித்தலை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
ஓட்டல் மற்றும் திறந்தவெளி உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்றார். இதில், மருத்துவ கண்காணிப்பாளர் ஹரிகரன், நிலைய மருத்துவ அலுவலர் அனுபமா, இதய நோய் துறை தலைவர் ஆறுமுகம், உதவி பேராசிரியர்கள் கண்ணன், ரகோத்தமன், சுரேஷ், வேல்மாரியப்பன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.