×

நூறு நாள் வேலை திட்டத்தில் மோசடி பண்ணவாடி பஞ்சாயத்து செயலாளர் சஸ்பெண்ட்

மேட்டூர்,  செப்.30: நூறு நாள் வேலை திட்டத்தில், பண மோசடியில் ஈடுபட்ட பண்ணவாடி ஊராட்சி செயலாளர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம்,  பண்ணவாடி ஊராட்சி செயலாளராக இருப்பவர் பிரபாகரன்(33). இவர்,  வரப்பள்ளத்தூரை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் என்பவரது நிலத்தில்,  கல்வரப்பு அமைக்கப்பட்டதற்கு ₹78,472 ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட  தொழிலாளிகளுக்கு கூலியாக வழங்கியதாக கணக்கு எழுதியுள்ளார். இந்த கணக்கை ஆன்லைனில்  பார்த்த விவசாயி செந்தில்குமார், தனது விவசாய நிலத்தில் கல்வரப்பு  அமைக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், சேலம்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரிடம் புகார் தெரிவித்தார். இந்த  புகார் குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், வேலை  செய்யப்பட்டதாக பிரபாகரன் ₹78 ஆயிரத்து 472ஐ மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து, கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்  முத்துசாமி உத்தரவிட்டார்.

Tags : Pannawadi ,panchayat secretary ,
× RELATED அரக்கோணத்தில் ரூ.1.79 கோடியில் வளர்ச்சி ...