சேலம், செப்.30: சேலம் பெரியபுதூர் கே.எம்.எஸ். கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுமதி. அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் விக்னேஷ்(23), நாமக்கல் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். கணவரை விவாகரத்து செய்த ஆசிரியை சுமதி, மகனுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து விக்னேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இவருக்கு கஞ்சா பழக்கமும் உள்ளது. இதனால் தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தாய் சுமதி, பேர்லாண்ட்ஸ் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து மகன் மீது புகார் கொடுத்தார். கார் வேண்டும் என கேட்டு தகராறு செய்ததுடன், கத்தியால் கையை அறுத்துக்கொண்டதாகவும், தன்னை கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் புகாரில் கூறினார்.