போச்சம்பள்ளி, செப்.30: போச்சம்பள்ளி அருகே பலத்த சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல், தென்னை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக தம்பதி உயிர் தப்பினர். போச்சம்பள்ளியில் கடந்த ஒரு வாரமாக கடுமையாக வெயில் வாட்டி வந்தது. நிலக்கடலை அறுவடைக்கு தயரான நிலையில், மழை பெய்யாததால் அறுவடை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து, சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. அகரம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததில் அப்பகுதியில் உள்ள தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தது. அகரம் பகுதியில் சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல், தென்னை மரம் சாய்ந்து செல்வமணி என்பவரது ஓட்டு வீட்டின் மீது விழுந்தது. அப்போது, வீட்டில் இருந்த செல்வமணி, அவரது மனைவி செந்தாமரை ஆகியோர் மீது ஓடுகள் விழுந்ததில், சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.