×

மணல் கடத்தலை தடுக்க புதிய விதிகள் வகுக்கப்படுகிறதா? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு


மதுரை, செப். 30: மணல் கடத்தலை தடுக்க புதிய விதிகள் வகுக்கப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எல்லைக்குட்பட்ட மாவட்டங்களில் சவடு மண் அள்ள ஏற்கனவே தடை உள்ளது. இந்நிலையில் சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உபரி மண் என்ற பெயரில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கக்கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள், ‘‘அரசுத் தரப்பில் மணல் திருட்டை தடுக்க ஐகோர்ட் உத்தரவுப்படி  இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்’’ என கேள்வி எழுப்பினர். பின்னர் நீதிபதிகள், ‘‘மணல் கடத்தலை தடுக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணல் கடத்தலை தடுப்பதற்கான மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் விதிகள் அமல்படுத்தப்படுகிறதா அல்லது தமிழக அரசு புதிதாக விதிகள் வகுக்கிறதா என்பது குறித்து அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை அக்.4க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Government ,Tamil Nadu ,
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...