‘குடும்பப் பிரச்னையை தீர்த்து வையுங்க சார்...’ மனைவி, குழந்தைகளுடன் வந்து ‘குடிமகன்’ தற்கொலை மிரட்டல் போடி காவல்நிலையத்தில் பரபரப்பு

போடி, செப். 30: குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்கக்கோரி, போடி காவல்நிலையத்தில், குடும்பத்தோடு வந்து தற்கொலை மிரட்டல் விடுத்த ‘குடிமகனுக்கு’ போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். தேனி மாவட்டம், போடி முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் முனியாண்டி (34). நகராட்சி தற்காலிக தூய்மைப்பணியாளர். இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். மது அருந்தும் பழக்கமுள்ள முனியாண்டியால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. நேற்று போதையில் இருந்த முனியாண்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, மண்ணெண்ணெய் கேனுடன் போடி காவல்நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்த போலீசாரிடம், ‘‘எனது குடும்ப பிரச்னையை தீர்த்து வையுங்கள். இல்லாவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்வோம்’’ என மிரட்டல் விடுத்தார். மண்ணெண்ணெய் கேனை பறித்த போலீசார், முனியாண்டி மற்றும் அவரது குடும்பத்தை அமர வைத்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: