வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 161 மனுக்கள் பெறப்பட்டன 20 இடங்களில் நடந்தது

வேலூர், செப்.29: வேலூர் மாவட்டத்தில் நேற்று வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 161 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகங்களில் திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடப்பது வழக்கம். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கோரிக்கை மனுக்களாக கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் அளிப்பது வழக்கம். இதன்மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் கொரோனா பரவல் தடுக்கும் வகையில் இந்த குறைதீர்வு கூட்டம் கடந்த மார்ச் 23ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. தொடர் பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெற இயலவில்லை.

இதற்கிடையில், நேற்று முதல் அந்தந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது மனுக்களை அளிக்கலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். இதையடுத்து, 6 மாதங்களுக்கு பிறகு நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் குறைந்த அளவில் மனுக்கள் அளித்தனர். ஒவ்வொரு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் தலா 8 முதல் 13 மனுக்கள் பெறப்பட்டன. முதல் நாளான நேற்று 20 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் 161 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் ஒரு சில பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் என நம்பி வந்தவர்கள், மனுக்கள் பெறாததால் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories: