கள்ளக்குறிச்சி, செப். 29: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமை தாங்கினார். எஸ்பி ஜியாவுல்ஹக், வருவாய் அலுவலர் சங்கீதா, சப்-கலெக்டர் காந்த், திட்ட இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கூடுதல் நிலம் நிர்வாக ஆணையரும் கள்ளக்குறிச்சி மாவட்ட வடகிழக்கு பருவமழை சிறப்பு மேற்பார்வை அலுவலருமான நாகராஜன் கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகள் எவையெவை என்பதனை முன்கூட்டியே கண்டறிந்து மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்ல முன்னேற்பாடுகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு போதுமான அளவில் பள்ளிக்கூடம் மற்றும் சமூதாய கூடம் தயார்படுத்தி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்தினி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ரத்தினமாலா, டிஎஸ்பி ராமநாதன் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, வேளாண்மைத்துறை, தீயணைப்பு துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.