×

காரில் கஞ்சா, ஊசி மருந்துகள் பறிமுதல் குமரியில் போதை பொருள் விற்ற 8 பேர் அதிரடி கைது

நாகர்கோவில், செப். 29: குமரியில் கஞ்சா, போதை ஊசி விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  குமரி மாவட்டத்தில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் பலர் கஞ்சா மற்றும் போதை ஊசிக்கு அடிமையாகி உள்ளனர். கஞ்சா விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் கைது செய்து வந்தாலும் கூட, விற்பனை குறைய வில்லை. கொரோனா ஊரடங்கிற்கு பின், ஆங்காங்கே பல இளைஞர்கள் கஞ்சா விற்பனையாளர்களாக மாறியும் உள்ளனர். இது தொடர்பாக புகார்களின் அடிப்படையில் கஞ்சா மற்றும் போதை ஊசி விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அதன் பேரில் தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டமும் பாய்ந்துள்ளது.

இந்த நிலையில் வடசேரி இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) காளீஸ்வரி, தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையில் நேற்று முன் தினம் மாலை வடசேரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை சோதனை செய்ய நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்தியவர்கள், அதில் இருந்து இறங்கி தப்ப முயன்றனர். அவர்களில் 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். 2 பேர் தப்பினர். பிடிபட்ட காரை சோதனை செய்த போது அதில் கஞ்சா மற்றும் போதை ஊசி மருந்துகள் இருந்தது தெரிய வந்தது.  காரை பறிமுதல் செய்து அதில் இருந்தவர்களை வடசேரி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் நாகர்கோவில் கட்டையன்விளை காமராஜர் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (55), மேலபுத்தேரி பகுதியை சேர்ந்த சரவணன் (23), பறக்கை எம்.எம்.ேக. நகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்ற மணிகண்டன் (33), திருநெல்வேலி வி.கே.புரத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா (31), திருநெல்வேலி கருங்குளம்  கண்ணன் (46) என்பது தெரிய வந்தது.

இவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 2.25 கிலோ கஞ்சா மற்றும் போதை ஊசி மருந்துகளையும்  பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நாகர்கோவில் அருகுவிளையை சேர்ந்த சேகர் என்ற லோடுமேன் சேகர், சரத் ஆகிய 2 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை தப்பி ஓடிய சேகர், சரத் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கைதானவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர், இவர்கள் இளைஞர்கள், மாணவர்களை குறி வைத்து போதை ஊசி மருந்துகளை சப்ளை செய்துள்ளனர். இதற்காக வாட்ஸ் அப் குரூப் வைத்துள்ளனர். அதில் கஞ்சா, போதை ஊசி கும்பல்களை சேர்ந்த புரோக்கர்கள் இணைந்துள்ளனர்.
புரோக்கர்கள் கொடுக்கும் தகவல்களின் பேரில் சப்ளை செய்து வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. போலீஸ் பிடியில் இருந்து தப்பிய  லோடுமேன் சேகர் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக ஏராளமான வழக்குகள் உள்ளன. போலீசாரும் அவ்வப்போது  கைது செய்துள்ளனர். ஆனாலும் லோடுமேன் சேகர் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நாகர்கோவிலில் அதிகளவில் போதை ஊசி, கஞ்சா புழக்கத்துக்கு வர இவரும் காரணம் என போலீஸ் தரப்பில் கூறி உள்ளனர்.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...