உடுமலை, செப்.29: தென்னையில் மகசூல் குறைந்ததால் தேங்காய் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இதுதவிர பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் 2 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்துள்ளனர். உடுமலை மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மதுரை, ஒட்டன்சத்திரம், சென்னை கோயம்பேடு, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தேங்காய் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. டெல்லி, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் இங்கிருந்து தேங்காய்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.கடந்த ஆண்டு கோவை திருப்பூர் மாவட்டங்களில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகரித்ததால் தற்போது தென்னைகளில் மகசூலும், தேங்காயின் அளவும், எடையும் குறைந்துள்ளது. ஆயிரம் தேங்காய்கள் கிடைக்கின்ற தோப்பு ஒன்றில் தற்சமயம் 300 முதல் 400 தேங்காய்களே கிடைக்கின்றன.