தர்மபுரி, செப்.29: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடந்தது. தீயணைப்பு மீட்புத்துறை அலுவலர்கள் மற்றும் 20 கமாண்டோ வீரர்கள் தீயணைத்தல், உயர்வான இடங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, இயற்கை இடர்பாடு நேரங்களில் மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு மீட்பு பணிகள் செய்து காண்பித்தனர். மேலும் தீயணைப்பு மீட்புத்துறையின் சார்பில், மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை மற்றும் பேரிடர்களை பொதுமக்கள் எதிர்கொள்ளும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் மலர்விழி, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜாஸ்மின், உதவி மாவட்ட அலுவலர் ஆனந்த் மற்றும் கமாண்டோக்கள் கலந்துகொண்டனர்.